
பொள்ளாச்சி: ஜூலை 13-
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசியதாவது:
பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் எல்லோரும் நின்று கொண்டு உள்ளோம். இது ஒரு மாவட்டத்தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான், உங்கள் நம்பிக்கையை பார்க்கும் போது எல்லா பக்கமிருந்தும் வந்திருக்கின்றனர். இங்கு இருக்கின்ற தன்னார்வலர் ஒருவரின் தந்தை தற்பொழுது தான் உயிரிழந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர். அதையும் தாங்கிக்கொண்டு போதைக்கு எதிராக அந்த தன்னார்வலர் இங்கு நின்று கொண்டுள்ளார். போதைக்கு எதிராக வலுவாக உள்ளோம்.
38 நாளில் 19 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த இயக்கம் எனது குடும்பத்திற்கு சொந்தமானது கிடையாது, உங்களுக்கானது. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர் தான். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் 50 லட்சத்தை எட்டும் போது நிரந்தரமாக ஒரு நல்ல சமூகம் உருவாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
ஆறு மாதம் இலக்கு வைத்துள்ளோம். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அக்டோபர் மாதம் குழந்தைகள் நலன் என ஆறு மாதங்களில் ஆறு முக்கிய பிரச்சினைகளை எடுத்து தீர்வு காண உள்ளோம். ‘வீ த லீடர்’ அமைப்பில் 17 சதவீதம் மகளிர் இருக்கிறார்கள். இன்னும் அதிகமாக வேண்டும். 2031 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும், ஆறு மாதங்கள் முழுமையாக சமூக பணி செய்வோம். மக்கள் நம்மிடம் வருவார்கள்.


















