
வாஷிங்டன்: ஆகஸ்ட் 30-அமெரிக்க பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் தென் கரோலினாவின் தலைநகரான கொலம்பியாவில் உள்ள ஒரு பூங்காவில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 29 வயதான கிறிஸ்டோபர் டீலாங் என்ற போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
பிறகு சக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 33 வயதான ஆடம் டைலர் டவ்டி என்ற நபரும் உயிரிழந்தார். இவர் பல்வேறு வழக்குகளில் குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு புகார் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் பூங்காவில் பதுங்கி இருந்த நபரிடம் சென்று விசாரணை நடத்திய போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெமிக் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூங்கா பகுதி தற்போது போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














