Home தலைப்பு செய்தி கர்நாடக அமைச்சருக்கு நெருக்கடி

கர்நாடக அமைச்சருக்கு நெருக்கடி

பெங்களூரு: செப்.10-
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளியின் அலுவலகம் மற்றும் இல்லம் உட்பட 18 இடங்களில் நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் சோதனையைத் தொடர்ந்து நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஆவணங்களை பரிசீலித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முதலே சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தை (ஃபெமா – FEMA) மீறி வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ள குற்றச்சாட்டின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 18 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, நள்ளிரவு வரை அமைச்சரிடம் விசாரணை நடத்தினர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் விசாரணை தொடர்ந்தது. நள்ளிரவு 2 மணி வரை சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
நள்ளிரவு 3 மணிக்கு அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளி உறங்குவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 7 மணி முதல் மீண்டும் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடையும் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சதீஷ் ஜாரக்கிஹோளியின் இல்லத்திலேயே இருப்பார்கள்.
சதீஷ் ஜாரக்கிஹோளி உறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட உடனேயே, நள்ளிரவு 3 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் மற்றொரு குழு அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தது. முழுமையான சோதனை முடிவடைந்த பின்னரே ‘பஞ்சநாமா’ (சாட்சிப் பதிவு) நடத்தப்படும்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் மட்டுமன்றி, வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் முதலீடுகளைக் கொண்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், சதீஷ் ஜாரக்கிஹோளிக்கு எதிராக ஃபெமா சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக அல்லது தவறான வழியில் ஈட்டிய கருப்புப் பணத்தை, சட்டப்பூர்வமாக ஈட்டிய பணமாக மாற்றும் தில்லுமுல்லுவே ‘மணி லான்டரிங்’. இது ஒரு பொருளாதாரக் குற்றமாகும். போதைப்பொருள் விற்பனை, ஊழல் அல்லது ஏமாற்று வேலைகள் மூலம் வந்த பணத்தின் ஆதாரத்தை மறைப்பதற்காக, வங்கிப் பரிவர்த்தனை அல்லது வேறு தொழில்கள் மூலமாக பணத்தைச் சுழற்சி செய்வதே மணி லான்டரிங் ஆகும்.
இது இந்திய அரசு 2002-இல் அமல்படுத்திய ஒரு கடுமையான சட்டமாகும். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை என்பது மணி லான்டரிங் குற்றத்தைக் கண்டறியவும், தடுக்கவும் மற்றும் அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டக் கட்டமைப்பாகும்.
இந்தச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதப் பணத்தைப் பறிமுதல் செய்யவும், சொத்துக்களை முடக்கவும் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது