
சென்னை: ஜூன் 29-
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனிடையே, அவரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது பேசுபொருளாகி உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் குறித்து திமுக மாணவர் அணி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளும் தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், போதைப் பொருள் ஒழிப்பு நாளன்று, சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது வெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல வீடியோ எடுத்து, அதை ‘தக் லைஃப் மொமென்ட்’ என்று ரீல்ஸ் வைரல் ஆனது.
இந்த செயல் இளைஞர்களை தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய போக்கைக் கொண்ட ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது தமிழக இளைஞர்களுக்கு நன்மை தராது. எனவே, அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் இன்று (29-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாணவர் அணி நிர்வாகிகள், மாணவர்கள் இதில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி திரண்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை – எழும்பூரில் ஆர்ப்பாட்டத்துக்கு மேடை அமைத்த திமுகவினரை தடுத்து போலீஸார், அவர்களை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணியின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


















