
சென்னை: மே 8-
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதையொட்டி அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிலையான ஆட்சியமைய அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கியும், மதவாத சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
1) நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.
2) சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். லட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் அவரின் சாதனை ஆகும். இத்தகைய மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதே வேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
4) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.


















