
அசான், ஆக. 9- தென் கொரியாவின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்ராஜை எதிர்த்து விளையாடினார். இதில் அஷ்மிதா சாலிஹா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிடபிள்யூ உலக டூர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு அஷ்மிதா சாலிஹா முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். உலகத் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள அஷ்மிதா சாலிஹா இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் ஹான் கியான்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். உலகத் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள ஹான் கியான்சி அரை இறுதி சுற்றில் ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி 22-20, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கா-ராமை வீழ்த்தினார்.
















