
யூஜின், ஆக. 9- அமெரிக்காவின் யூஜின் நகரில் யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்டர் தூரம் ஈட்டியை செலுத்தி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் ஆப்பிரிக்காவின் யான்-ஹென்ட்ரிக் ஹேமன்ஸ் (80.50 மீட்டர்) தங்கப் பதக்கமும், டொமினிகாவின் அடிசன் ஜேம்ஸ் (73.89 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். தமிழகத்தை சேர்ந்த தரணிதரன் 72.35 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 19 வயதான ஆஷிஸ் யாதவ். இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். உலக ஜூனியர் அரங்கில் நீரஜ் சோப்ரா எறிந்த தூரமே தற்போதும் சாதனையாக உள்ளது. மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா சிங் 1.79 மீட்டர் உயரம் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்தியாவின் ஷாநவாஸ் கான் (7.73 மீட்டர்), ஜித்தின் அர்ஜுனா (7.57 மீட்டர்) ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
















