
புதுடெல்லி, ஜூலை 24- ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகளை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாட்கள் போரின்போது இந்த ஏவுகணைகள் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன. எஸ் 400 ஏவுணை கவசத்தில் 40 கி.மீ, 120 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன்மூலம் ஒரே நேரத்தில் 72 வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த சூழலில் ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணையை போன்று உள்நாட்டில் குஷா என்ற பெயரில் அதிநவீன ஏவுகணை கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கிய இந்த ஏவுகணை கவசத்தில் 150 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் குஷா ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. அப்போது தரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட வான் இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.
அமெரிக்காவின் தாட், ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணை கவசத்துக்கு இணையாக இந்தியாவில் குஷா ஏவுகணை கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. 2028-ம் ஆண்டில் இந்த ஏவுகணை கவசங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.













