
புதுடெல்லி, ஜூலை 25-
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். ஒரு வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்பி வந்துள்ளேன்.
நாட்டின் இளைஞர்களின் விருப்பங்கள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நம் அனைவரின் தார்மிகக் கடமையாக இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்துக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்து, தேர்வை ரத்து செய்து, மறு அட்டவணையை வெளியிட்டது. அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் தேர்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. இந்த நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21, 2026 அன்று தேர்வு நிறைவடைந்தது.
முதல் நாளிலிருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் தேர்வு மாஃபியாவால் பாதிக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் நான் உறுதியாக இருந்தேன்.
ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்ட நீட்-யுஜி தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இருப்பினும், பொறுப்புள்ள பதவிகளில் இருந்த சில தனிநபர்கள், பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
நமது ஜனநாயகத்தின் சக்தியின் மீது எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய; வளர்ச்சியடைந்த இந்தியாவின் சிற்பிகள்.
கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலம்.
நாட்டின் இளைஞர்கள் மாயைகளின் தீய வட்டத்திற்குள் வீழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன், இதுவே எனது உறுதி.
ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாது. நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தை படிப்பிற்கு அர்ப்பணித்து, தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை மனதில் கொண்டு, எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்.
பிரதமரின் வழிகாட்டுதலுக்கும், நம்பிக்கைக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவையில் உள்ள எனது மதிப்புக்குரிய சக ஊழியர்களுக்கும், அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கு சேவை செய்வதே என் வாழ்வின் தலையாய முன்னுரிமை. நான் எப்போதும் அதற்கே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்.
புரி ஜெகந்நாதரின் அருளால், இந்திய மக்களின், ஒடிசா மக்களின், நாட்டின் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினமாவை அடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
















