
ஜெய்ப்பூர்: மே 13-
ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளார். இந்த வினாத்தாளை படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
.கடந்த 8-ம் தேதி மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிகார், ஜுன்ஜுனு மற்றும் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் சிகாரில் பரவிய அதே மாதிரி வினாத்தாள் மற்றொரு சமூகவிரோத கும்பலுக்கும் கிடைத்திருக்கிறது.
அந்த கும்பல் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் அண்மையில் கூடி சதித் திட்டம் தீட்டியிருக்கிறது. இந்த கும்பல் மூலம் மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர், ராஜஸ்தான், பிஹார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் மாதிரி வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.2 முக்கிய குற்றவாளிகள் கைது
இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ராஜஸ்தானின் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகராக கருதப்படுகிறது.
இங்கு ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. தற்போது கோட்டா நகருக்கு இணையாக ராஜஸ்தானின் சிகார் நகரும் வளர்ந்து வருகிறது. இந்த நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நீட், ஜேஇஇ பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிகார் நகரில் ஆர்.கே.கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ராகேஷ், ஜெய்ப்பூரை சேர்ந்த மணீஷ் யாதவ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


















