Home செய்திகள் தேசிய செய்திகள் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை – நீதிமன்றம்

பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை – நீதிமன்றம்

டெல்லி, ஆக. 10- பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கிலிருந்து பூஷனை விடுவித்திருந்தது. இந்நிலையில், ஏன் விடுத்தது? என்பது குறித்து நீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது. வழக்கிலிருந்து பூஷனை விடுவிப்பதாக ஆக.3ம் தேதியே நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின் முழு தகவல்களும் இன்றுதான் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதில்தான் ஏன் பூஷன் விடுவிக்கப்பட்டார்? என்பதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், “இந்த வழக்கு பொய்யானது, ஜோடிக்கப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், “வீராங்கனைகள் அளித்த புகார்கள் அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டவை போல தெரிகிறது. இது சதியின் வெளிப்பாடாக இருக்கலாம். மட்டுமல்லாது இந்த வழக்கு, அரசியல் காரணங்களுக்காக தூண்டப்பட்டதாக தோன்றுகிறது. புகார் அளித்தவர்கள் மற்றும் சாட்சிகள் யாரோ ஒருவரால் வழிநடத்தப்பட்டு ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். விசாரணையின் போது குற்றம் சாட்டிய வீராங்கனைகளில் இருவர் பிறழ் சாட்சியாக மாறினர். அவர்கள் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கவில்லை. அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. இதனால் பிரிஜ் பூஷன் சரண்சிங் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமர் நீதிமன்றம் கௌரவமாக விடுவிக்கிறது” என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.