
ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன பேச போகிறார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. நம்மூரில் TNPSC போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC (ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம்) தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன என்பதுதான் மாணவர்களின் புகார்.JPSC தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, கடந்த 16 நாட்களாக அம்மாநில தலைநகர் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேறு வழியே இல்லாமல், மாணவர் போராட்டத்திற்கு பணிந்த அம்மாநில அரசு, தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது. அதாவது 14வது JPSC சிவில் சர்வீஸ் ஆரம்ப தேர்வு மற்றும் 2023-2025 ஆண்டுக்கான JPSC தேர்வுகளையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது. தேர்வுகள் ரத்து என்னதான் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் கூட, ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதில் மாணவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றனர். சிபிஐ விசாரணைக்கு ஓகே சொல்லும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் உறுதியாக இருக்கின்றனர். மாநில அரசின் வாதம் முறைகேடுகள் தொடர்பாக சிஐடி விசாரணை நடக்கிறது, பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பதாக மாநில அரசு சொல்லியிருக்கிறது. இதுபோக.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த விசாரணை நடத்தப்போவதாகவும் அரசு கூறியிருக்கிறது. மேலும் JSPC அமைப்பின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.













