Home செய்திகள் தேசிய செய்திகள் ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

போபால், செப். 11: மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டம், பராஜ் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் சில தினங்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களுக்கு குமட்டல், வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அவர்களை குடும்பத்தினர் உடனடியாக பண்டா சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், அருகில் உள்ள 2 கிராமங்களில் இருந்தும் இதே பிரச்சினையுடன் பலர் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கும், சாகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 32 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், ‘சாகர் கோல்ட்’ என்ற மதுபானத்தின் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.