
திருச்சி: மே 5-
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கான வெற்றிச் சான்றிதழை, கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 தொகுதிகளை வசப்படுத்துகின்றன.
தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வருகிறார். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை லயோலா கல்லூரியில், சட்டமன்ற தேர்தல் வெற்றி சான்றிதழை பெற்றார் தவெக தலைவர் விஜய். பெரம்பூர் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய், வெற்றிச் சான்றிதழை நேரில் சென்று பெற்றுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது சார்பாக மாற்று வேட்பாளராக பதிவு செய்த சிரஞ்சீவி, விஜய் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் பெற்றுக் கொண்டார். . மேலும், தவெக வேட்பாளர் விஜய்யின் ஏஜெண்ட்டாகவும் சிரஞ்சீவி செயல்பட்டார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். தவெகவில் இணைந்த அவர், இந்த முறை லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் குப கிருஷ்ணன். அவரது மகனான சிரஞ்சீவி தான், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கான வெற்றிச் சான்றிதழை பெற்றுள்ளார்.

















