
சென்னை: ஜூலை 14-
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. ஏற்கனவே இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், மொத்தமாக 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டெண்டரில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மகளிர் நலன் என்ற தலைப்பில் முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தாய்மானன் சீர் பெட்டகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சட்டசபைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சியை பிடித்த நிலையில், ஜூன் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அத்தனை குழந்தைகளும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கில் கொள்ளப்பட்டு பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டரை தமிழக அரசு கோரி இருக்கிறது. இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.













