
டெஹ்ரான்: மார்ச் 2-
ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிகபட்ச அதிகாரம் வைத்திருந்த மதத் தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்குப் பின்னர் இவர்தான் வாரிசு என்று காமேனி பகிரங்கமாக யாரையும் அறிவிக்கவில்லை.ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனிதான் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது தந்தை காமேனியிடம் அரசியல் கற்றவர் என்று கூறப்படுகிறது. எனினும் எதிர் தரப்பைச் சேர்ந்த 2 பேர் ஈரானில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மர்யம் ரஜாவி மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.அமெரிக்க தாக்குதலில் காமேனி கொல்லப்பட்ட பிறகு, இவர்கள் இருவரும் விடுத்த செய்தியில், “ஈரான் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். அத்துடன் ஈரானில் இஸ்லாமிய குடியரசுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர்.
மர்யம் ரஜாவி வெளியிட்ட செய்தியில், “ஈரானிய மக்களே… மதகுரு ஆட்சியைத் தூக்கி எறியுங்கள். ஜனநாயகக் குடியரசு ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கிடையில், ஈரான் கடைசி மன்னரின் மகன் ரெசா பஹ்லவி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இஸ்லாமிய ஆட்சி சிதைந்தால், அதற்கு மாற்றான ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன.
அமெரிக்காவின் நடவடிக்கை ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல. அது மனிதாபிமான தலையீடு” என்று கூறியுள்ளார். இவர்கள் தவிர ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு வழிவகுத்த ருஹோல்லா கொமேனியின் பேரன் ஹசன் கொமேனியும் (53) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்.
ஆனால், காமேனி கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நல்ல தலைவர் ஒருவர் ஈரானை வழிநடத்துவார். அவர் யார் என்பது எனக்கு நன்கு தெரியும், ஆனால், அதை உங்களுக்கு சொல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார். ஆனால், யார் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.















