
கொல்கத்தா: மே 2-
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கான தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாகாவத் நினைவு பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் திரிணாமுல் நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு பாதுகாப்பு அறைகளில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திறக்கப்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இது குறித்து அவருக்கு கிடைத்த தகவலை அடுத்து கனமழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மம்தா அங்கு விரைந்தார். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் முறைகேடான நடவடிக்கைகள் நடப்பது குறித்த வீடியோகாட்சிகளை வெளியிட்ட முதல்வர் மம்தா, அங்கு இருந்த திரிணாமுல் கட்சியை சேர்ந்த தலைவர்களான குணால் கோஷ் மற்றும் சசி பாஞ்சா மற்றும் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
சுமார் 4 மணி நேரம் முதல்வர் மம்தா அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், ‘‘வாக்கு எண்ணிக்கை மையத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பிருப்பதாக குற்றம்சாட்டினார். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் முறைகேடு செய்ய முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். வாக்கு எண்ணும் செயல்பாட்டில் முறைகேடு செய்யும் எந்தவொரு திட்டமும் பொறுத்துக்கொள்ளப்படாது. ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை பகுதிக்குள் ஒரே ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். வேட்பாளரோ, முகவர்களில் ஒருவரோ மேல்தளத்தில் தங்கலாம். ஊடகங்களுக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் பரிந்துரைத்துள்ளேன். வெளிப்படைத்தன்மையை பராமரிப்பது அவசியமாகும். மக்களின் வாக்குகள் பாதுகாக்கப்படவேண்டும். புகார் எழுந்ததை தொடர்ந்தே நான் இங்கு விரைந்தேன். துணை ராணுவம் என்னை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை” என்றார்.
இதனிடையே பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜ தலைவர்கள், வரவிருக்கும் தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். எனினும் முறையற்ற எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்றனர்.


















