Home செய்திகள் தேசிய செய்திகள் நகைகளுடன் ரீல்ஸ் போட்ட பெண்! ஆட்டை போட்ட திருடர்கள்

நகைகளுடன் ரீல்ஸ் போட்ட பெண்! ஆட்டை போட்ட திருடர்கள்

டெல்லி, ஜூன் 9- இன்றைய டிஜிட்டல் உலகில் ‘லைக்’குகளுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டோம். ஆனால், நாம் பகிரும் ஒரு சிறிய வீடியோ, நம் வாழ்நாள் சேமிப்பையே காவு வாங்கும் என்று யாராவது நினைத்ததுண்டா? மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம் பகட்டுக்காக தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில் ஒரு பெண் காட்டிய நிலையில் இன்று அவரது நகைகளை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட மர்மநபர்கள குறித்து விரிவாக பார்ப்போம். சிவபுரி மாவட்டம் மோகினி கிராமத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். இவருக்குச் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வது என்றால் கொள்ளை பிரியம். கையில் கட்டுக்கட்டாகப் பணம், கழுத்து நிறையத் தங்கம், ஜொலிஜொலிக்கும் வெள்ளி நகைகள் எனத் தனது ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாகப் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோக்கள் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்ததோ இல்லையோ, திருடர்களுக்குச் சரியான ‘ரூட் மேப்’ போட்டுத் கொடுத்துவிட்டது. சினிமா பாணியில் ஒரு நள்ளிரவு வேட்டை அன்று நள்ளிரவு… ஊரே உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கச்சிதமான திட்டத்தோடு அந்த வீட்டிற்குள் நுழைந்தது ஒரு கும்பல். முதலில் வீட்டின் வெளியே இருந்த மின் கம்பிகளைத் துண்டித்தனர். பின்னர், ஒரு ஏணியைப் பயன்படுத்தி லாவகமாகச் சுவர் ஏறி குதித்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்கள் காட்டிய வேகம் அதிரவைப்பதாக இருந்தது. தங்கள் முகம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காக, ஒரு நீண்ட குச்சியால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை மேல்நோக்கித் திருப்பிவிட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக கேமரா முழுமையாகத் திரும்பாததால், திருடர்களின் சில நடமாட்டங்கள் அதில் பதிவாகின. திருடர்கள் நேராக நகைகள் இருக்கும் அலமாரிக்குச் சென்று, அதன் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். கண்காணிப்பில் இருந்த குடும்பம்: திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்த விதம் மற்றும் அவர்கள் நேராக நகைகள் இருக்கும் இடத்திற்கே சென்றதைப் பார்க்கும்போது, அவர்களுக்கு வீட்டின் உட்புற அமைப்பு அத்தனை தெளிவாகத் தெரிந்திருப்பது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சனா வெளியிட்ட வீடியோக்களே திருடர்களுக்குத் துப்பு கொடுத்திருக்கலாம் என கிராம மக்கள் பேசிக் கொள்கின்றனர். “உங்கள் தனிப்பட்ட சொத்துக்களையும், இருப்பிடத்தையும் பொதுவெளியில் பகிரும்போது கூடுதல் கவனம் தேவை” என சைபர் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளப் பிரியர்களுக்கு ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. தற்போது போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்துத் திருடர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.