
கிலியன் எம்பாப்பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதுவும் கூடுதல் நேரத்தில் எம்பாப்பே அடித்த கோல் உண்மையில் பிரமிப்பூட்டும் கோல் என்பதோடு இந்த உலகக் கோப்பையில் இதுவரையிலான கோல்களில் ஆகச்சிறந்தது என்ற வகையறாவைச் சேர்ந்ததானது. தனக்கு வந்த அருமையான கிராஸை 30 யார்டு தூரத்திலிருந்து கோல் வலை கிழிய அடித்த சக்தி வாய்ந்த ஷாட் மறக்க முடியாது மனதில் நெடுங்காலம் தங்கும் கோலாக அமைந்தது.
நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை குரூப்-ஐ ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் செனகல் தேசிய கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கியது.
2018 உலகக் கோப்பையை வென்று, 2022 தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி இந்த தொடரிலும் கோப்பையை வெல்லும் முக்கிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
எனினும் முதல் பாதியில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே முதல் பாதியில் வெறும் 14 முறை மட்டுமே பந்தை தொட்டார். பிரான்ஸ் அணியை விட செனகல் 5-1 என்ற கணக்கில் அதிக ஷாட்களை முயற்சித்தது. 25-வது நிமிடத்தில் செனகல் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு, கோல்கீப்பர் மைக் மெய்னான் காலில் பட்டு வெளியே சென்றது.
ஆனால், 2-வது பாதியில் பிரான்ஸ் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்தியது. 63-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த துல்லியமான பாஸை எம்பாப்பே கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். மாற்று வீரராக களமிறங்கிய பிராட்லி பார்கோலா 79-வது நிமிடத்தில் செனகல் கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியை ஏமாற்றும் வகையில் பந்தை வலைக்குள் செலுத்தினார். பிரான்ஸ் முன்னிலையை 2-0 ஆக முன்னிலை பெற்றது.
பின்னர் இப்ராஹிம் எம்பாயே செனகலுக்காக அடித்த கோல் வெறும் ஆறுதல் கோல் என்று கூற முடியாது, கொஞ்சம் தூரத்திலிருந்து வலையைத் தாக்கிய அவரது ஷாட் திகைப்பூட்டும் இன்னொரு ஷாட்தான் என்பதில் ஐயமில்லை. அட்டகாசமான கோல் இது.




















