
மும்பை: ஜூன் 20-
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு இளநிலை டாக்டர் படிப்புக்கும், முதுநிலை டாக்டர் படிப்புக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடந்தது. ஆனால் தேர்வு முன்பாகவே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தத குற்றச்சாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால் நீட் மறுதேர்வு ஜுன் 21ம் தேதி (நாளை) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வினாத்தாள் கசிவதை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு இந்திய விமானப்படை விமானத்தின் வழியாக எடுத்து செல்லப்படுகிறது. இதற்கிடையே தான் நாளை நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவரும் நீட் மறுதேர்வு எழுத தயாராகி வருகிறார். தற்போது ஹால்டிக்கெட் வெளியான நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நாக்பூரில் அவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்போது அபுதாபியில் சென்டர் ஒதுக்கியதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் நாடு விட்டு நாடு அவருக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுபற்றி நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தவறு தொழில்நுட்ப பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது. தேர்வு மையம் மாற்றி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.





















