
டல்லாஸ்: ஜூலை 14 –
ஸ்பெயின் அணியை கண்டு அஞ்சவில்லை. அவர்களின் ஆட்டத்திறனை மதிக்கிறோம் என பிரான்ஸ் அணி வீரர் இப்ராஹிம் கோனேட் கூறியுள்ளார்.
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை (ஜூலை 15) அதிகாலை 12.30 மணிக்கு தொடங்குகிறது.
“என்னுடைய கருத்தின்படி பிரான்ஸ் அணி யாரையாவது பார்த்து பயந்தால் அது எங்கள் அணியாகவே இருக்கும். நாங்கள் ஏற்கெனவே அவர்களை தோற்கடித்துள்ளோம். அதனால், எங்களுக்கு எந்த அணி குறித்தும் பயம் என்பது இல்லை.
2 அணிகளுமே தலைசிறந்த அணிகள், உலகத் தரம் வாய்ந்த அணிகள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்போம்” என்று அரையிறுதிக்கு முன்னேறியதும் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான லமின் யமால் தெரிவித்தார். இந்நிலையில், ஸ்பெயின் அணியை கண்டு அஞ்சவில்லை என்று பிரான்ஸ் வீரர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“ஸ்பெயின் மட்டுமல்ல எந்த அணியையும் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. சிறந்த முறையில் ஆட்டத்துக்கு எங்களை தயார் செய்து கொள்வோம். ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் இலக்கு.
ஸ்பெயின் சிறந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் வீரர்கள் அதிகம் அந்த அணியின் உள்ளனர். அதனால் நாங்கள் குறிப்பிட்டு ஒரு வீரர் மீது மட்டும் கவனம் செலுத்த முடியாது. அந்த அணிக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
நாங்கள் இயல்பாக இருக்க விரும்புகிறோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது பிரான்ஸ் அணிதான் என்ற ஆரூடத்துக்குள் நாங்கள் அடங்க விரும்பவில்லை. இது மாதிரியான ஆட்டங்களின் முடிவு களத்தில் தான் தெரியும்” என்று இப்ராஹிம் கூறியுள்ளார்.
















