
சென்னை: ஜூன் 29-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜிநாமா செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது; சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றார். ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா 6 ஆக உயர்ந்தது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் மீது நிலுவையில் உள்ளன.
தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


















