Home செய்திகள் தேசிய செய்திகள் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட கோவில்

கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட கோவில்

பாகல்பூர்: செப். 2-
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை நதியின் தீவிர அரிப்பு காரணமாக, நூற்றாண்டு பழமையான சைத் துர்கா கோவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
நதியின் போக்கில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் கடுமையான நீரோட்டம் காரணமாக இப்பகுதியில் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் நடைபெற்று வந்த கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு மாநில துணை முதலமைச்சர் விஜய் குமார் சௌத்ரி அவசரமாக பாட்னா திரும்பினார். ஆற்றின் அரிப்பைத் தடுக்கும் பணிகளில் நீர்வளத்துறை பொறியாளர்களும் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக நாத்நகர் மற்றும் சங்கர்பூர் பகுதிகளில் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசர காலங்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.