Home செய்திகள் தேசிய செய்திகள் சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்த.. ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை

சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்த.. ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை

டெல்லி: மே 14 –
சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த தடை வரும் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டுத் தேவைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பல்வேறு சர்க்கரை வகைகளுக்கான ஏற்றுமதி நிலை ‘கட்டுப்படுத்தப்பட்டது’ என்பதிலிருந்து ‘தடைசெய்யப்பட்டது’ என மாறியுள்ளது. மூல சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என ITC குறியீடுகளின் கீழ் வரும் அனைத்து வகை சர்க்கரைகளுக்கும் இது பொருந்தும் என அந்நிய வர்த்தக தலைமை இயக்குநரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்க்கரை கையிருப்பை உறுதிப்படுத்தி உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வது தடுக்கப்படும். பொதுவான தடை இருந்தாலும், சில குறிப்பிட்ட விதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட CXL மற்றும் TRQ ஒதுக்கீட்டின் கீழ் சர்க்கரை ஏற்றுமதி தொடரும்.அதேபோல, மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்காக, அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் முறைப்படி கோரிக்கை வைத்தால், இந்திய அரசு பரிசீலித்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னரே கப்பல்களில் ஏற்றப்பட்ட அல்லது துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்த சரக்குகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதாவது, அறிவிப்புக்கு முன்பே கப்பலில் ஏற்றத் தொடங்கிய சரக்குகள், கப்பல் கட்டணச் சீட்டு தாக்கல் செய்யப்பட்டு, துறைமுகத்தில் நங்கூரமிட்ட கப்பல்கள் மற்றும் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட சரக்குகள் ஆகியவை இந்தியாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடை செப்டம்பர் 30, 2026-க்குப் பிறகு நீட்டிக்கப்படாவிட்டால், தானாகவே மீண்டும் “கட்டுப்படுத்தப்பட்ட” (Restricted) நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.