
முசாஃபராபாத்: ஜூலை 29-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்டங்களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தலை புறக்கணிக்கக் கோரி ‘ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி’ (ஜேஏஏசி) உள்ளிட்ட அமைப்புகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், ராவலாகோட் பகுதியில் உள்ள டிரேக் எய்த் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் திரண்ட போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், ஜேஏஏசியின் முக்கிய நிர்வாகியான உமர் நசீர் காஷ்மீரியின் சகோதரர் உஸ்மான் நசீர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்துவதும், சுடப்பட்டவர்களின் சடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்ற கொடூரக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களில், இதுவரை பாகிஸ்தான் படைகளின் அடக்குமுறையால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அகீல் பாய் கூறுகையில், “இங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. ராவலாகோட் பகுதி முழுவதும் பிணங்களாலும் காயமடைந்தவர்களாலும் நிறைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.













