
பெங்களூரு: ஜூலை 29-
பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத். இவர் ஜாலஹள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் உடனே தன் உறவினர்களுக்கு போன் செய்து கங்கம்மன குடி சந்திப்பு பகுதிக்கு வரவழைத்துள்ளார். பேருந்து அங்கு வந்தடைந்ததும், அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் கும்பல் மஞ்சுநாத்தை மடக்கிப்பிடித்து சரமாரியாகத் தாக்கியது.
“நான் போலீஸ்… என்னை விட்டுவிடுங்கள்” என்று அவர் அலறியும் கேட்காமல், அவரது சட்டையைக் கிழித்து கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சுநாத்தின் முகம் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்ணும், ஹெட் கான்ஸ்டபிள் மஞ்சுநாத்தும் காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













