
மும்பை, மார்ச் 14- சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான தோனியிடம் சென்று நீங்கள் பிளேயிங் லெவனில் இல்லை என்று சொல்வதற்கு எந்த வீரரிடம் தைரியம் இருக்கிறது என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங்கால் கூட அப்படியொரு விஷயத்தை தோனியிடம் பேச முடியாது என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றுள்ள சூழலில், ரசிகர்களின் கவனம் ஐபிஎல் தொடர் பக்கம் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணியும், அடுத்தப் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கேகேஆர் அணியும் விளையாடுகின்றன.
அதன்பின் சிஎஸ்கே அணி தங்களின் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஐபிஎல் தொடரின் 14 போட்டிகளிலும் தோனி விளையாட தயாராக இருக்கிறார். நிச்சயமாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார். ஆனால் பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் தோனி இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடுவார் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுகையில், தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பது நிர்வாக முடிவா என்பது தெரியவில்லை. ஆனால் யார் சென்று தோனியிடம் இந்தப் போட்டியில் நீங்கள் விளையாடவில்லை என்று சொல்வார்கள்? அந்த தைரியம் யாருக்கு உள்ளது? பயிற்சியாளர் ஃபிளமிங்கால் சென்று சொல்ல முடியும் என்று நான் நம்பவில்லை.. தோனியிடம் சென்று நீங்கள் இந்தப் போட்டியில் விளையாட போவதில்லை என்று கூற யாராலும் முடியாது. இந்த உலகில் யாராலும் தோனியிடம் அப்படி பேசவே முடியாது.. அதனால் தோனி அத்தனை போட்டிகளிலும் விளையாடுவார் என்று எடுத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.




















