
பொன்னேரி: மே 20 –
பழவேற்காடு பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு, அதையொட்டி உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்காட்டை அடுத்த பசியாவரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் (35), 4 பேருடன் பழவேற்காடு பகுதியில், வங்காள விரிகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது மீன் பிடி வலையில், துருப்பிடித்த நிலையில் ஒரு அடி உயரம் மற்றும் 10 கிலோ எடைஉள்ள இரும்பாலான உருளை போன்ற மர்மப் பொருள் சிக்கியது.
அதிர்ச்சியடைந்த தேவபிரகாஷ், திருப்பாலைவனம் போலீஸாருக்கு தகவல் அளித்துவிட்டு, மர்மப் பொருளுடன் பழவேற்காடு, கடற்கரைக்கு திரும்பினார். அங்கு விரைந்த போலீஸார், மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப் பொருளை மீட்டனர். ஆவடி, வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில், மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப் பொருள், 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு என்பது தெரிய வந்தது.


















