
பாரிஸ், மே 27- பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 50-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனேரோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 16-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 47-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் லாரா சீக்மண்டையும், 4-ம் நிலை வீரராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டையும், 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் இவா ஜோவிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 37-ம் நிலை வீராங்கனையான பிலிப்பைன்ஸின் அலெக்சாண்ட்ராவையும் தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 6-7 (4-7), 2-6, 1-6 என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு வீரரான பிரான்ஸின் மோயிஸ் குவாமேவிடம் தோல்வி அடைந்தார்





















