
விக்டோரியா: ஜூன் 29-
சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையொட்டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி, விருதை வழங்கி கவுரவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், சிறு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டுவது ஆகியவற்றில் பிரதமர் மோடியின் பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதையும் சேர்த்து பிரதமர் மோடி இதுவரை 33 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: எனக்கு வழங்கப்பட்ட ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதுக்காக 140 கோடி இந்தியர்கள் சார்பில் சீஷெல்ஸ் மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீஷெல்ஸ் நாடு 50-வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. அத்துடன், இந்தியா – சீஷெல்ஸ் தூதரக உறவின் 50-வது ஆண்டையும் கொண்டாடுகிறோம். இரு நாடுகள் இடையே வர்த்தகம், கலாச்சார ரீதியான உறவு வலுவடைந்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில் சீஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உறுதி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, சீஷெல்ஸ் நாட்டுக்குத் தேவையான டிஜிட்டல் தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கும். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.




















