
சென்னை: ஜூன் 29-
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 28 துறைகளின் செயல்திட்டங்கள், வெற்றி தமிழகம் திட்டம் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
IAS, IPS அதிகாரிகள் மாநாடு இன்றும் நாளையும் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகளுடனான மாநாடு 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்றனர். இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.
அதன்பின்னர், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கிறது. மேலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்க உள்ளார். கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார் . அப்போது திறமையாக செயல்பட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.


















