
புதுடெல்லி: ஜூலை 31-
நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கரப்பான் பூச்சி கட்சியினர், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தாலும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாகவே கரப்பான் பூச்சி கட்சியினர் தலைமையில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்தே இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கரப்பான் பூச்சி கட்சியினருக்கு மத்திய அரசு சில வாக்குறுதிகளை அளித்திருந்தது.
அதில் முக்கியமாக போராடிய மாணவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படாது என மத்திய அரசு வாக்குறுதி கொடுத்திருந்தது. இதற்கிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட ரூச்சிகா சிங் என்ற இளம்பெண், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பேச்சு பிரதமர் பதவியின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும், சமூக அமைதியை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, பொது அமைதியை பாதிக்கும் வகையிலான கருத்து பரப்புதல் மற்றும் அவதூறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு, சம்பவம் நடைபெற்ற டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கரப்பான் பூச்சியினர், கிரிமினல் விசாரணை நடத்தப்படக்கூடாது என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியினர் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், “அந்த இளம்பெண் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். அது சிலருக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு இதுபோல கிரிமினல் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.













