
மும்பை, ஜூன் 3- உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் உள்நாட்டு நாணய மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்நிலையில், அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலையேற்றம் மற்றும் விலைமதிப் பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் ‘புளூம்பெர்க் எகனாமிக்ஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில், மே 22-ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரங்களில், ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்பனை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் சுமார் 750 கோடி வரை சேர்த்திருக்கலாம் என்று புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அமைப்பின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா கணித்துள்ளார். தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதிலும், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு குறைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, வரி உயர்த்தப்படும் போது ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள தங்கம் மற்றும் அது சார்ந்த டாலர் சொத்துகளின் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பு குறைந்துள்ளது மத்திய வங்கி தங்கத்தை விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது என அபிஷேக் குப்தா சுட்டிக்காட்டியுள்ளார்.


















