
புதுடில்லி, செப். 3- தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்; உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, இரண்டு நாள் தேசிய நீர் துறை உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீர் மேலாண்மை மற்றும் திட்டமிடலுக்கு ஏஐ தொழில்நுட்பம் மறறும் தரவுகளை பயன்படுத்த வேண்டும். நீர் துறை சார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து, சீரான முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் நவீன தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்;
உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; நீர் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஜல் உத்சவ்’ திருவிழாவை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.முறையான திட்டமிடல், போதிய வளங்கள் மற்றும் திறமையான அதிகாரிகளிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாற்ற முடியும். விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன் படுத்துவதற்கான முன்கூட்டிய திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களின் சிறந்த நீர் மேலாண்மைப் பயிற்சிகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடியும். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் எதிர்கால நீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தயார்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.














