
கிளாஸ்கோ: ஜூலை 27-
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ள ரிஷிகண்டா சிங், கட்டிடம் கட்டுமிடத்தில் தினக்கூலியாக இருந்து சாம்பியனாக மாறியவர் என்ற செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளம்வயதை பெரும்பாலும் வேலை பார்த்தே கழித்துள்ளார். இம்பாலின் பல்வேறு பகுதிகளில் கட்டிட வேலைகளில் அவர் தினக்கூலியாக வேலை பார்த்துள்ளார். செங்கல், சிமெண்ட், பலகைகளை சுமந்து பிழைப்பை நடத்தி வந்த அவர் தனது விடாமுயற்சியால் இன்று உலக விளையாட்டு ரசிகர்களை திரும்பிப் பார்த்து வந்துள்ளார்.தினந்தோறும் செங்கல், கட்டுமானப் பொருட்களை தூக்கி தூக்கி தனது உடலை வலுப்படுத்தி வந்துள்ளார். இதனால் இவரது கவனம் பளுதூக்குதல் விளையாட்டுக்கு சென்றுள்ளது. இதற்கு முன்பு 2017-ல் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் அவர் வெண்கலத்தைக் கைப்பற்றியிருந்தார்.தனது வெற்றி குறித்து ரிஷிகண்டா சிங் கூறும்போது, “முதலில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறிய அளவிலான வெற்றிகளைப் பெற்றேன். அதன் பின்னர் போதிய பணம் கிடைக்காததால் விளையாட்டை விட்டு விட்டு கட்டிட வேலையில் சேர்ந்தேன்.
தினக்கூலி வேலையிலிருந்து பளுதூக்கும் விளையாட்டில் சேர்ந்த போது சாதனை படைக்க முடியும் என்று நம்பினேன். தொடக்கத்தில் பெரும்பாலும் தோல்விகளே கிடைத்தன. ஒரு சிறந்த பளுதூக்கும் வீரராக வேண்டும் என்ற என் கனவும், அந்த விளையாட்டில் எனக்கிருந்த எதிர்காலமும் முடிந்துவிட்டதாகவே தோன்றியது. அப்போது நான் இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலையைச் செய்தேன்.
அதன் பின்னர் மீண்டும் பளுதூக்குதல் போட்டிகளுக்குத் திரும்பினேன். விடாத முயற்சியால் இப்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்” என்றார்.
மணிப்பூர் மாநிலத்திலிருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீரர் ரிஷிகண்டா சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இம்பால் மேற்கு மாவட்டத்திலுள்ள நகைரங்பாம் கிராமத்தில் வளர்ந்த இவருக்கு விளையாட்டுதான் உலகமாக உள்ளது.
















