
டேராடூன், ஏப்ரல் 23- மாநிலங்களுக்கு இடையிலான யுடிடி ஜூனியர் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் யு-19 அணிகள் பிரிவில் ஆடவர் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் பாலமுருகன் 11-9, 13-11, 8-11, 6-11, 9-11 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிராவின் குஷால் சோப்டாவிடம் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பி.பி.அபிநந்த் 11-5, 11-3, 7-11, 11-6 என்ற செட் கணக்கில் நீல் முல்யேவை தோற்கடித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டின் எஸ்.கே.மேகன் 11-4, 12-10, 11-7 என்ற செட் கணக்கல் இஷான் கந்தேகரை வீழ்த்தினார். இதன் பின்னர் மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் பி.பி.அபிநந்த் 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் குஷால் சோப்டாவை தோற்கடித்தார்.





















