
மும்பை, ஏப்ரல் 23- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமான தோனி, வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ஹாட்ரிக் தோல்வியுடன் நடப்பு சீசனை தொடங்கியிருந்த சிஎஸ்கே அணி தற்போது பார்முக்கு திரும்பி ஒரு நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றிய தருணத்தில், அதிரடி இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 177.88 ஸ்டிரைக் ரேட்டுடன் 201 ரன்கள் எடுத்திருந்தார். ஆயுஷ் மாத்ரேவின் விலகலால் சிஎஸ்கே அணி மீண்டும் ஒருமுறை தங்களின் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆயுஷ் மாத்ரே இடத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்டரான உர்வில் படேல் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே பேட்டர்கள் ஒரு குழுவாக இணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 90 பந்துகளில் 130 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியது இருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது.





















