
லக்னோ, ஏப்ரல் 23- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் நாந்த்ரே பர்கர்க்கு,10% போட்டி ஊதியத்திலிருந்து அபராதமும், ஒரு தண்டனை புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. “போட்டியில் வீரரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டும் உடல்மொழி, செயல், சைகைகளைப் பயன்படுத்திய” லெவல் 1 குற்றம் (விதி 2.5) செய்ததை பர்கர் ஒப்புக்கொண்டார். நடுவரின் முடிவையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதனால் அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்திறனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு ராஜஸ்தான் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வலுவான கம்பேக்கை நிகழ்த்தியது. லக்னோ அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, நான்காவது தொடர் தோல்வியை சந்தித்தது. நாந்த்ரே பர்கர் மிட்செல் மார்ஷின் (55) விக்கெட் உட்பட இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். ஆர்ச்சர் 3-20 எனச் சிறப்பாகப் பந்துவீசினார். ரிஷப் பந்த் மற்றும் ஏய்டன் மார்க்ரம் டக் அவுட் ஆனதால் லக்னோவின் இலக்கு தடுமாறியது. பந்த்தை பர்கர் முதல் ஓவரிலேயே கீப்பரிடம் கேட்ச் ஆக்கினார். இதே போன்று மார்க்ரம் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்தார்.மார்ஷ், பர்கரின் பந்தில் அரை சதம் அடித்தாலும், அதே ஓவரில் பராகிடம் பிடிபட்டு வெளியேறினார். மீடியம் ஃபாஸ்ட் பந்துவீச்சாளர் பிரிஜேஷ் ஷர்மா ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். ஆர்ச்சர் அதிவேகமாகப் பந்துவீசி, கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 110/6 என்ற சிக்கலான நிலையிலிருந்து 159/6 ரன்களுக்கு மீண்டெழ, ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அவர் ஒரு விக்கெட் எடுத்து இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.





















