Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழக எல்லையை வந்தடைந்தது காவேரி நீர்

தமிழக எல்லையை வந்தடைந்தது காவேரி நீர்

தருமபுரி: ஆக. 4:
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (ஆக.4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி காலையில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் பகலில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேலும், அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வந்தது.
இவ்வாறு திறக்கப்பட்ட உபரி நீர் 3-ம் தேதி மாலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியால் காவிரியாறு காய்ந்து கிடந்த நிலையில் நீர்வரத்து ஒகேனக்கல்லை வந்தடைய கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
இன்று (4-ம் தேதி) அதிகாலையில் உபரிநீர் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காலை 6 மணியளவில் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து பதிவானது. மேலும் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.