
டெல்லி, ஜூலை 25- ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் தர்மேந்திர பிரதானை மத்திய அரசு விட்டு கொடுக்காதது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ’நீட்’ வினாத்தாள் கசிவு உள்பட மத்திய அரசின் பிற தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமாகி உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது மத்திய அரசு சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நேற்று 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றைய பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்களின் மீதான வழக்கை வாபஸ் பெறுவது, நீட் தேர்வில் தற்கொலை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் ஏற்றனர். ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதான கோரிக்கையான தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை மட்டும் ஏற்கவில்லை. இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் இன்று 3வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதனால் இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகமாட்டார் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மேலும் அவர் பதவி விலகுவார் என்ற கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.













