Home செய்திகள் தேசிய செய்திகள் வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்

வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்

புதுடெல்லி: ஆக. 24:
ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தே வேரூன்றத் தொடங்கியது. 1967-ல் மேற்கு வங்கத்தில் தொடங்கிய நக்சல் இயக்கம், பிற்காலத்தில் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த பஸ்தார் பகுதி வழியாக சத்தீஸ்கருக்குள் நுழைந்து தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சுற்றி நக்சல்கள் பரவலாக இருந்த மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் எல்லைகள் உள்ளன.
நக்சலைட்கள், இந்த மாநிலங்களுக்கு எளிதாகச் சென்று வரவும், அடர்வனங்களில் பதுங்கவும் வசதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மண்டலம் இருந்தது. அதனால், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பஸ்தர் நக்சலைட்டுகளின் (மாவோயிஸ்டுகள்) கோட்டையாகவும், முக்கிய வியூக மைய மாகவும், அந்த இயக்கத் தலைவர்களின் தலைமையிடமாகவும் செயல்பட்டது.
பஸ்தர் மண்டலத்தில் உள்ள பஸ்தர், பீஜாப்பூர், தந்தேவாடா, சுக்மா, நாராயண்பூர், காங்கேர், கொண்டகாவ் ஆகிய 7 மாவட்டங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தால், சத்தீஸ்கர் மாநில அரசுக்கு இணையாக அவர்கள் மற்றொரு அரசாங்கமே நடத்தி வந்தனர்.
அவர்களை மீறி கல்வி, சாலை, சுகாதாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட எந்த அரசு திட்டங்களையும், மாநில அரசு இந்த மாவட்டங்களில் செயல்படுத்த முடியவில்லை.
ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை, நக்சல் பாதித்த மாவட்டங்களில் தங்கியிருந்து பணி புரிவது சவாலாக இருந்தது. தற்போது நக்சல்கள் ஒழிக்கப் பட்ட பிறகும், பஸ்தர் அடர் வன கிராமச் சாலைகளில் தினமும் துணை ராணுவப் படை வீரர்கள் கண்ணிவெடி சோதனைகளையும், சாலை ரோந்துப் பணிகளையும் இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறார்கள்.