Home செய்திகள் தேசிய செய்திகள் வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நிராகரிப்பு

வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நிராகரிப்பு

காத்மாண்டு, ஆகஸ்ட் 29
நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேபாளத்திற்கு பல நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா முதன்முதலாக 10 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது. அதன் பின் 37 டன் பொருட்களுடன் மற்றொரு விமானம் அனுப்பப்பட்டது. இதேபோல் அமெரிக்கா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்ப முன்வந்தன. ஆனால், நேபாள அரசு இதனை நிராகரித்தது.
“நாங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான திறமையும் ஆற்றலும் கொண்டுள்ளோம். எனவே வெளிநாட்டு உதவி தேவையில்லை,” என்று பிரதமர் பாலேந்திர ஷா அறிவித்தார்.
2015-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பல நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பியதால் நேபாளம் நிர்வாக சிரமங்களை சந்தித்தது. இதனை கருத்தில் கொண்டு, இந்த முறை வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்துள்ளனர்.
நேபாளம் நிதி உதவிகளை மட்டும் நாடி வருகின்றது. புனரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் பொருள் சார்ந்த உதவிகளை எதிர்பார்க்கின்றது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவை நிதி உதவிகளை அறிவித்துள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாடோ கந்தா, “நேபாளத்திற்கு இடர் மதிப்பீடு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த உதவியளிப்போம்,” என்று தெரிவித்தார்.