
சென்னை: ஜூலை 31-
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
முந்தைய திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், டாஸ்மாக் முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்திக் ஆகிய 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘கடந்த ஆட்சியில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.













