
ஸ்ரீநகர்: ஆக. 1-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர், குல்காம் மாவட்டம் கெல்லம் பகுதியில் நேற்று மாலை வெளிமாநில தொழிலாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், தொழிலாளர்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த ரத்தவெறி தாக்குதலில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும், குண்டுபாயந்து உயிருக்குப் போராடிய மற்றொரு தொழிலாளியை மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டு ஸ்ரீநகரில் உள்ள ‘ஸ்கிம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் இந்திய ராணுவத்தினரும் இணைந்து அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவலத்துறை தலைமை இயக்குநர் நலின் பிரபாத் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அவர், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாகக் கண்டறிந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.













