
வாஷிங்டன், ஜூலை 22-
சவுதி அரேபியாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தை செறிவூட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் புதிய அணு ஆயுத போட்டி உருவாகும் அபாயம் குறித்து சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் டிரம்ப் அரசு மத்திய கிழக்கை தனது கண்ட்ரோலில் வைத்திருக்க விரும்புகிறது. இதன் காரணமாகவே அங்கு சவுதி அரேபியா உடன் அமெரிக்கா தொடர்ச்சியான நல்லுறவை கடைப்பிடித்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் சவுதி அரேபியா உடனான முக்கியமான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளாராம் இது தொடர்பான தகவல்களை பிரபல அமெரிக்க ஊடகமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தத்தை அடுத்த சில நாட்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, சவுதி அரேபியாவின் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்.
இதன் மூலம் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கு வாய்ப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் கையெழுத்திட்டுள்ள ‘123 ஒப்பந்தம்’ என்ற முக்கியமான இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதுவரை அமெரிக்கா பிற நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தங்களில், அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் இடம்பெற்றிருக்கும். சவுதி உடனான டீலிலும் இது தொடர்பாக சில பாயிண்டுகள் இருந்தாலும் கூட வழக்கமாக இருக்கும் அளவுக்கு கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
















