
பெங்களூரு: ஆக. 3-
நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடகா முதல்வர் சிவகுமார் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தக் கனமழையினால் பாதுகாப்பு கருதி, நீர் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு முதற்கட்டமாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, நீர் வரத்து அதிகரிப்பால் கபினி அணை வேகமாக நிரம்பியது. இதனால், படிப்படியாக உபரி நீர் வெளியேற்றும் அளவும் அதிகரித்தது. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையினால், கபினி அணிக்கான நீர்வரத்து வினாடிக்கு 31,700 கனஅடியாக உள்ளது. இதனால், கபினி அணை முழு கொள்ளளவான 2,284 அடியை எட்டியது. இதனால், கபினியில் இருந்து நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கே.ஆர்.எஸ். அணைக்கு 32,048 கனஅடியாகவும், ஹேமாவதி அணைக்கு 12,856 கனஅடியாகவும், ஹாரங்கி அணைக்கு 11,645 கனஅடியாகவும் நீர்வரத்து உள்ளது.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













