Home செய்திகள் உலக செய்திகள் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்

பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்

பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக பாதித்துள்ளது. அரசியல் ரீதியாக தாங்கள் ஒதுக்கப்படுவதாகக்கூறி ராவல்கோட் பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி போராடி வரும் கூட்டு அவாமி நடவடிக்கை குழு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையைக் கண்டித்தும், கூட்டு அவாமி நடவடிக்கை குழுவின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரிட்டனில் உள்ள பிராட்போர்டு பகுதியில் பிரிட்டன்வாழ் காஷ்மீர் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது, பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி, அடிப்படை உரிமைகள், பொதுமக்களுக்கான சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை, சர்வதேச சமூகத்தின் கவனம் பெறச் செய்வதற்காகவே இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.